சவுதி தீ விபத்தில் உயிரிழந்த 11 இந்தியர்களில் சென்னையைச் சேர்ந்தவரும் பலி
சவுதி அரேபியாவின் நஜ்ரன் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 11 பேரில், ஒருவர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த கல்யாண் என்பது தெரியவந்துள்ளது.
நஜ்ரன் நகரில் இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக 11 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் உத்தரபிரதேசத்தையும், மூவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் பீகார், பஞ்சாப் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த கல்யாண் தீ விபத்தில் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 5 பேருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், இறந்தவர்களது உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் ஏற்பாடுகளை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை இணைச் செயலர் கோபால் பாக்லே கூறும்போது, உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பலத்த காயமடைந்த 5 பேருக்கும் உரிய சிகிச்சைகளையும், உதவிகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்து வருகிறோம். இறந்தவர்களது சடலங்களை இந்தியா அனுப்பத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் அங்கிருக்கும் தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

