தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரயில் துர்பே ரயில் நிலையத்துக்கு வந்தபோது இருக்கையில் அமருவது தொடர்பாக மூன்று பெண் பயணிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறி கைது நடவடிக்கை வரை சென்றுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகிறது.
மும்பை புறநகர் ரயில்களில் ஏறுவதும், ஏறியவர்களுக்கு சீட் கிடைப்பதும் மும்பை வாசிகளுக்குக் போர்களத்துக்கு செல்வது போன்றது. ரயில்களில் ஏறும் போது, இடம் கிடைப்பதிலும் பயணிகளிடம் எப்போதும் சண்டைகள், வாக்குவாதம் நடைபெறுவது வாடிக்கையானது. ஆனால் இந்த முறைப் பெண் பயனிகளிடை ஏற்பட்ட சண்டை அடிதடி இரத்தம் காயங்கள் வரை சென்றுள்ளது.
குல்நாத் கான் என்ற பெண் தன் மகள், பேத்தி ஆகியோருடன் ரயிலில் தானேவிலிருந்து பயணம் செய்தபோது, கோபர்கைர்னே ரயில் நிலையத்தில் சினேகா என்ற பெண் ஏறியுள்ளார். பின் ரயில் துர்பே வந்தபோது ஓரு ரயில் இருக்கை காலியானது. உடனே அந்த இருக்கையில் சினேகா அமர்ந்தார். அந்த இருக்கையில் குழந்தையை அமரவிடாமல் சினேகா அமர்ந்துகொண்டதாகக் கூறி சினேகாவுடன் தாயும் மகளும் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். சண்டையை விலகச் சென்ற மற்ற பெண்களிடத்திலும் சண்டை ஏற்பட்டதால், பயணிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி நகர்ந்து சென்றனர்.
பின்னர் நெருல் ரயில் நிலையம் வந்தபோது அங்கிருந்த பெண்கள் சிலர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரயில் பெட்டிக்குள் சாரதா என்ற பெண் காவலர் வந்தார். காவலரைப் பார்த்த உடனே சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்கள், மீண்டும் சண்டையிட்டுக்கொண்டனர். சண்டையை விலக முயன்றகொண்டியிருந்த பெண் காவலருக்கும் அடி விழுந்துள்ளது. இது குறித்து வசாய் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஒருவரை கைது செய்துள்ளனர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களுக்குத் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.