தருமபுரியில் தேதியை தவறாக சொன்ன மனைவியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர், சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தருமபுரி நண்பர்கள் காலனியில் வசிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியரான செந்தில்குமார், மதுப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார் எனக் கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று காலை தூங்கி எழுந்த செந்தில்குமார், மனைவியிடம் தேதி என்னவென்று கேட்டபோது, அவர் தவறுதலாகக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்று மனைவியுடன் வாக்குவாதம் செய்த செந்தில்குமார், காய்கறிகள் வெட்டும் கத்தியால் மனைவி முத்தமிழ்செல்வியை குத்தியுள்ளார்.
முத்தமிழ்செல்வியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான செந்தில்குமாரை கைது செய்த தருமபுரி நகர காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். சிறையில் தேநீர் கொடுக்கப்பட்ட டம்ளரால் செந்தில்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காயமுற்ற அவர், தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.