இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்று இறுதிச்சடங்குகள் செய்யும் அவல நிலையில் இருப்பதாக ஒரு கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இப்பிரச்னைக்குத் தீர்வுகாண உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டு்ம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்தவர் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் செய்வது காலம் தொட்டு தமிழரின் மரபாக இருக்கிறது. ஆனால் இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதிலேயே பெரும் சவாலை சந்தித்து வருவதாக கூறுகின்றனர் கல்லுட்டை என்ற கிராம மக்கள்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு அருகேயுள்ள கல்லுட்டை கிராமத்திற்கென 2 கிலோ மீட்டர் தொலைவில் உத்திரகாவிரி ஆற்றின் மறு கரையில் சுடுகாடு உள்ளது. ஆற்றில் தடுப்பணை உயர்த்தப்பட்டதாலும், தூர்வாரப்பட்டதாலும் 10 அடிவரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் உயிரிழப்போரின் உடல்களை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை கிராமத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
200 மீட்டர் தூரத்திற்கு தண்ணீரில் உடலை சுமந்துசெல்லும் போது, பலரும் இடர்பாடுகளை சந்தித்துள்ளனர். ஆற்றில் தவறி விழுந்த உடலை மீட்டெடுத்து இறுதிச்சடங்கு செய்த வேதனையான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றனர் கல்லுட்டை கிராம மக்கள். எனவே ஆற்றை கடந்துசெல்ல உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இறந்தவர் உடலை எடுத்து செல்ல தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டிய நிலை கல்லுட்டை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்ற தங்களது 5 ஆண்டுகால கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் கல்லுட்டை கிராம மக்கள்.