தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் இரண்டு குளங்களை காணவில்லை என அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.
திருவாரூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருநெய்பேர் கிராமம். இங்கு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்ட இரட்டை குளத்திற்கு காவேரி ஆற்று கால்வாயில் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது. இதன்மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்த நிலையில், இப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் விளங்கியது இரட்டை குளம்.
விவசாயிகளும் தங்களது கால்நடைகளை பராமரிப்பதற்கு இக்குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது இரட்டை குளம். ஒரு குளம் முற்றிலும் காணாமல்போன நிலையில், மற்றொரு குளம் குட்டையாக சுறுங்கிவிட்டது என்கிறார்கள் கிராம மக்கள்.
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி குளத்தை மீட்கவேண்டும் என திருநெய்பேர் கிராமத்தினர் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக அவர்கள் அளித்த மனுவுக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுத்திருப்பாதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.