19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும், தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெற்றது.
பொதுவாக மார்கழி மாத சுக்கில பட்ச ஏகாதேசி ஒவ்வொரு ஆண்டும் மாத தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வரும். இந்த ஆண்டு மார்கழி இறுதியில் வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான பூபதி திருநாள் எனப்படும் தேர் உற்சவம், தை மாதம் புனர்பூச நாளில் நடக்க வேண்டும் என்பது நியதி.
இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் நான்காம் தேதியே வந்து விடுகிறது. இதனால் திருவத்யயன எனப்படும் வைகுண்ட ஏகாதசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 03.12.2021ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்கியது. பகல்பத்தின் 10ம் நாளான நேற்று 13.12.2021 மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து வைகுந்த ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
செர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. செர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாள் தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.