சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்டநிலையில் அவரின் உடலை கூராய்வு செய்த தலைமை மருத்துவர் இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார்.
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என்று ஆணையத்தில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் உடலைக் கூராய்வு செய்த குழுவின் பொறுப்பாளராக இருந்த தலைமை மருத்துவர் செல்வக்குமார் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.