“எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம்; தங்கம்தான்..” - ஜல்லிக்கட்டில் சாதித்து காட்டிய யோகதர்ஷினி!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆறுதல் பரிசை பெற மறுத்து கவனம் ஈர்த்த மாணவி யோகதர்ஷினியின் காளை கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்க காசை பரிசாக பெற்றது.
பதினோராம் வகுப்பு மாணவியான யோகதர்ஷினி சிறு வயது முதலே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். தந்தையுடன் இணைந்து காளைகளை பராமரித்து வந்த யோகதர்ஷினி மதுரை அவனியாபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார். அவரது காளை பிடிமாடாகிவிட்டது.
அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக்குழுவினர் சிறப்பு பரிசு அறிவித்தனர். ஆனால் அதை வாங்க மறுத்து களத்தைவிட்டு வெளியேறினார் யோகதர்ஷினி. பரிசு வாங்கிச் செல்லும்படி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தும் அவர் பரிசை பெறவில்லை.
கடந்த ஆண்டும் அவரது காளை பிடிமாடாகி விழாக்குழுவின் பரிசை அவர் மறுத்திருந்தார். இந்த நிலையில் முத்துகருப்பு என்ற தனது காளையை கோவை ஜல்லிக்கட்டில் களமிறக்கினார் யோகதர்ஷினி. அவரது காளை வீரர்கள் கையில் பிடிபடாததால் அவருக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. அவரை ஊக்குவிக்கும் வகையில் தங்கக் காசு பரிசாக அளிக்கப்பட்டது.