நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, வெளிநாட்டு பயணிகள் தமிழகம் வரும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்புடைய நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களை தீவிரமாக கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்துதல். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10 ஆவது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரத்தை பதிவிட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பாதிப்புகள் கொண்ட நாடுகளை தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காடு பேருக்கு உத்தேச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அறிகுறி இருப்பது உறுதியான வெளிநாட்டு பயணிகள், மருத்துவ உதவிக்கு எண் 104 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.