ஓபிஎஸ், ஈபிஎஸ் வாகனங்களில் தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாகனங்களை மறித்து தாக்குதல் நடத்தியதாக அமமுகவினர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மயிலாப்பூரைச் சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளரான மாறன், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தூண்டுதலின்பேரில், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் கையில் ஆயுதங்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் கார்களை வழிமறித்து முற்றுகையிட்டதாக குறிப்பிட்டிருந்தார். கற்கள், காலணிகள், கம்புகளை கொலை வெறியோடு வீசியெறிந்து தாக்கியதாகவும், இதில் தாம் காயமுற்றதாகவும் புகாரில் மாறன் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில், அமமுகவைச் சேர்ந்த பெயர் தெரியாத நபர்கள் மீது, ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமமுகவினர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விட்டரில் கருத்துதெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தங்கள் இயக்கம் ஜனநாயக ரீதியாக அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எப்போதும் நம்பிக்கை கிடையாது என பதிவிட்டுள்ளார்.