கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மோதி விபத்து: தூக்கி வீசப்பட்ட நபர்கள்.. பகீர் காட்சி
தக்கலை அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், முன்னே சென்ற பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகத்தில் வந்த கேரள பதிவெண் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் சென்ற கணேசன் சொகுசு காரின் முன் பகுதியில் சிக்கி காருடன் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஆட்டோவில் இருந்த மணி மற்றும் மாகீன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார், வழக்குப்பதிவு செய்து சொகுசு காரை ஓட்டி வந்த நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த் பெஞ்சமின் என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் சொகுசு கார் பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

