முன்னாள் எம்பியும் திமுக சொத்து பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமி பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், அவருக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக வங்கிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அரவக்குறிச்சி எம்எல்ஏவாகவும், கரூர் எம்பியாகவும் இருந்தவர் கே. சி. பழனிச்சாமி. கரூரைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமி, திமுக சொத்து பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் ஆவார். சொந்தமாக காகித உற்பத்தி ஆலை, பேக்கேஜ் நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். இவர் தொழில் வளர்ச்சிக்காக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி ஆகிய வங்கிகளில் சுமார் 197 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அதை திருப்பி செலுத்தாததால் கே.சி.பழனிச்சாமிக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஏலம் விடப் போவதாகவும் வங்கிகள் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது. கரூர் மற்றும் திருச்சியில் உள்ள வீடு, வணிக வளாகங்கள் ஆகிய 9 சொத்துக்களை ஏலமிட உள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.