அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கேட்டு வந்தவருக்கு வேட்பு மனு நிராகரிப்பு குறித்த சர்ச்சையில் ‘தனி நபராக வந்ததாலும், முன் மொழிய ஆள் இல்லாததாலும் வேட்பு மனு வழங்கப்படவில்லை’ என அதிமுக தலைமை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஓட்டேரியை சார்ந்த ஓமப்பொடி சி. பிரசாத் சிங் என்பவர் வழக்கறிஞருடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவருக்கு வேட்பு மனு அளிக்காமல் நிராகரிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் பேசிக்கொண்டே இருக்கும்போதே கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறும்படி அதிமுக தொண்டர்கள் கூச்சலிட்டு அவரை வெளியேற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுத்தொடர்பான அதிமுக தலைமையிடம் விளக்கம் கேட்டபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என்பதால் தனியாக வருபவர்களுக்கு வேட்பு மனு அளிக்க இயலாது என்றும், முன்மொழிய வழிமொழிய ஆட்கள் தேவை எனவும், அவர்களும் 5 ஆண்டுகள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் என விதிகள் இருப்பதால் அவருக்கு வேட்பு மனு அளிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.