தமிழகத்தில் வோல்டேஜ் பிரச்னை இனி இருக்காது - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
மின்னழுத்த ஏற்றத்தாழ்வு பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காணும் நடவடிக்கையில் டேன்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மின் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மின்னழுத்த ஏற்றத்தாழ்வு. VOLTAGE FLUCTUATION என அழைக்கப்படும் இப்பிரச்னையால் வீடுகளில் மின் விளக்குகள், தொலைக்காட்சி, மின் விசிறி போன்ற சாதனங்கள் பழுதாகின்றன. வீடுகள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் தொழிற்துறையினரும் கூட இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதுடன் சில சமயங்களில் பெரும் விபத்துகள் ஏற்பட்டு விலைமதிப்பற்ற உயிர்களே பறிபோகும் ஆபத்தும் ஏற்படுகிறது. மின்சாரம் மிக குறைவான அழுத்தத்திலும் அல்லது மிக அதிகமான அழுத்தத்திலும் வரும் பிரச்னைக்கு டேன்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.
மின்னகம் குறைதீர்ப்பு மையத்திற்கு 8,900 புகார்கள் வந்த நிலையில் அவற்றில் சுமார் 7 ஆயிரம் இடங்களில் புது மின்மாற்றியை வைத்தோ அல்லது ஏற்கெனவே உள்ள மின்மாற்றியை பழுது பார்த்தோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக டேன்ஜெட்கோ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 1,900 இடங்களிலும் மின்னழுத்த ஏற்றத்தாழ்வு பிரச்னை சில மாதங்களில் சரி செய்யப்பட்டு இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு தரப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் சென்னையில் பில்லர் பாக்ஸ் எனப்படும் மின் இணைப்பு பெட்டிகள் தரையிலிருந்து சில அடிகள் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் மழைக்காலங்களில் மின் கசிவு விபத்துகளை பெருமளவு தவிர்த்துள்ளதுடன் மின் தடைகளையும் குறைத்துள்ளதாக டேன்ஜெட்கோ அதிகாரி தெரிவித்தார்.