கொரோனா சிகிச்சையின்போது காலை இழந்ததற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துனர் ரமேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காரமடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது ரமேஷிற்கு இடது காலில் கடுமையான வலி ஏற்படவே அதற்கும் சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள வேறு மருத்துவமனையில் சிகிச்சையை தொடருமாறு கூறி ரமேஷை டிஸ்சார்ஜ் செய்ததாகக் கூறப்படுகிறது.
கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தபோது, இடது காலில் ரத்தம் உறைந்துள்ளதாகக் கூறி காலை அகற்றியதாகவும் ரமேஷ் கூறுகிறார். தனது நிலைக்கு தவறான சிகிச்சை வழங்கிய தனியார் மருத்துவமனையே காரணம் எனக் கூறும் ரமேஷ், தனக்கு உதவ வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனாவால் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படும் எனக் கூறியுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்கள் சிகிச்சையால் ரமேஷிற்கு பாதிப்பு ஏற்படவில்லை என விளக்கமளித்துள்ளது.