திண்டுக்கல்லில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவியின் உடல், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில், பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள புதரில் தலை, முகம் எரிந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த அவர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் வாயில் துணி அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடற்கூராய்வுக்கு பின் சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் உறுதி அளித்ததையடுத்து, சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதனிடையே, சிறுமி படித்த அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.