இஸ்லாமியர்கள் சித்ரவதை - காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பரிந்துரை
மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நான்கு இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த, ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ம் ஆண்டு மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சாகுல் ஹமீது, அல் ஹஜ், ரபீக் ராஜா,ஷாயின்ஷா ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறப்பு படை உதவி ஆய்வாளர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 காவல்துறை அதிகாரிகள் கைது செய்த நால்வரையும் செல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு தண்ணீர், உணவு தராமல் சித்தரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாகுல் ஹமீது உள்ளிட்ட நால்வரும் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு காவல்நிலையத்தில் தங்களை துன்புறுத்தியதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2011 ல் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.