தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு 10 சதவிதமாக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பரவலில், குழந்தைகளின் பாதிப்பு 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது தரவு வழியாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரியில்) 6% என்றிருந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆகஸ்டில் 10% என உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
மாத வாரியாக மொத்த பாதிப்பில் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சதவிகிதம் இங்கே:
கடந்த ஜனவரி மாதத்தில் தமிழகத்தில், 20,326 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 1224 பேர் குழந்தைகள். அதாவது குழந்தைகள் பாதிப்பு 6 சதவிகிதமாக இருந்தது. அதேபோன்று பிப்ரவரி மாதமும் குழந்தைகள் பாதிப்பு 6 சதவிகிதமாக இருந்தது. இது மெல்ல அதிகரித்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 7.2 சதவிகிதமாக இருந்தது. மே மாதத்தில் 7.7 சதவிகிதமாக குழந்தைகளின் பாதிப்பு இருந்தது. அதன்பின் கொரோனா பாதிப்பு மாநில அளவில் குறைந்தாலும் கூட பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.
ஜூன் மாதம் தமிழகத்தில் 3,83,180 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் இதில் 8.8% குழந்தைகள் ஆவர். இதே போன்று தொடர்ந்து அதிகரித்து ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 10.2 சதவீதமாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
குழந்தைகள் மத்தியிலான பாதிப்பு அதிகரிக்கலாம் என முன்னரே கணிக்கப்பட்டிருந்தத்தால், அதை கையாள்வதற்காக தமிழகத்தில் அரசு தரப்பில் 12,000 முதல் 15,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,800 ஐசியூ படுக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 15,000 மருத்துவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

