தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தன் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய அவரை, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இந்த பயணத்தின்போது 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "பழிவாங்கும் நடவடிக்கை. வருமான வரித்துறை, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இது பல மாநிலங்களில் நடந்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் நடைபெறத் தொடங்கியுள்ளது. எதனையும் சட்டப்படி எதிர் கொள்வோம்" என்றார்.
மேலும், மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மேகதாது விவகாரத்தில் யார் என்ன கூறினாலும் எங்கள் நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக இருப்போம் என கூறினார்.