ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை - தமிழக டிஜிபி உத்தரவு

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை - தமிழக டிஜிபி உத்தரவு
ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை - தமிழக டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் செண்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி.கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும், ஆனால் சோதனை என்ற அடிப்படையிலும், புகார்கள் வருவதாகவும் கூறி அன்றாட செயல்பாடுகளில் காவல்துறை அடிக்கடி தலையிடுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உத்தரவுகளை பிறப்பித்தது. அதனடிப்படையில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதால் அதை தடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு பல்வேறு கருத்துக்களை தெரிவித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழக டிஜிபி-க்கு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாவோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளை பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைபிடிக்கும் வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயரதிகாரிகள், காவல்துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com