வெட்டப்பட இருந்த இரட்டை மரம் : 45 கி.மீ தூக்கிச்சென்று காப்பாற்றிய இளைஞர்கள்
அரியலூரில் வீடு கட்டுவதற்காக வெட்டப்பட இருந்த இரட்டை மரத்தை இளைஞர்கள் குழு இயந்திரத்தின் மூலம் 45 கிலோ மீட்டர் தூக்கிச் சென்று வேறு இடத்தில் நட்டனர்.
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரது நிலத்தில் அரச மரத்துடன் இணைந்த பனைமரம் இருந்தது. அவர் அந்த இடத்தில் வீடு கட்ட இருந்ததால் மரத்தை அப்புறப்படுத்த நினைத்தார். இதை அறிந்த சோலைவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மரத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு, அதனை அவர் அலுவலக வளாகத்தில் வைக்க அனுமதி பெற்றனர்.
நக்கம்பாடி ஊர்த் தலைவரின் உதவியோடு ஜேசிபி வாகனம் மூலம் மரத்தை வேரோடு பிடுங்கி, அதிலுள்ள கிளைகளை அனைத்தையும் அகற்றினர். பின்னர் மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். சுமார் 45 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு அரியலூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரத்தை நட்டனர்.
சாலை விரிவாக்கத்துக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் அரை நூற்றாண்டு கால மரத்தை அரை மணிநேரத்தில் இயந்திரங்கள் வீழ்த்துவதால், அதனைக் காப்பாற்ற தாங்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதாக சோலைவனம் இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களின் இந்த ஆக்கப்பூர்வ முயற்சியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெகுவாகப் பாராட்டினார்.