விருதுநகரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக இளைஞரை கணவர் கல்லால் அடித்து கொலை செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (26). இவருடைய மனைவி தனலட்சுமி (26). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். விக்னேஷ்குமார் சிவகாசியிலும், தனலட்சுமி சாத்தூர் அருகேயுள்ள படந்தாலிலும் வசித்து வந்தனர். தனலட்சுமிக்கும், அதேப் பகுதியில் வசிக்கும் சதிஷ் (25) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விக்னேஷ்குமார் திடீரென படந்தாலில் உள்ள தனலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ் மற்றும் தனலட்சுமி ஒன்றாக இருந்ததை விக்னேஷ் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விக்னேஷ், தனலட்சுமியின் வீட்டிலே வைத்து சதீஷை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த சதீஷை அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த சாத்தூர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிவகாசியில் இருந்த சதீஷின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனலட்சுமியை சாத்தூர் நகர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய விக்னேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.