“பெற்றோரால் ஆபத்து, என்னை கூட்டிப்போங்க, பயமா இருக்கு”: உயிரிழந்த பெண்ணின் கடைசி வரிகள்..!

“பெற்றோரால் ஆபத்து, என்னை கூட்டிப்போங்க, பயமா இருக்கு”: உயிரிழந்த பெண்ணின் கடைசி வரிகள்..!
“பெற்றோரால் ஆபத்து, என்னை கூட்டிப்போங்க, பயமா இருக்கு”: உயிரிழந்த பெண்ணின் கடைசி வரிகள்..!

உத்திரமேரூரில் திருமணமாகி இரண்டே மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் செந்தாரகை (23). இவரின் தந்தை பாலாஜி உத்திரமேரூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயார் மாதர் சங்கத்தில் பதவி வகித்து வருகிறார். செந்தாரகையை அதேபகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் இன்று உத்தரமேரூரில் உள்ள தனது தாய் வீட்டில் செந்தாரகை பாத்ரூம் செல்லும்போது வலுக்கி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோரால் கூறப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், உடலை ரகசியமாக புதைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செந்தாரகை வீட்டிற்கு சென்றுள்ளனர். போலீசாரிடம் செந்தாரகை தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தாரகையின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற செந்தாரகையின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருமணமான இரண்டே மாதத்தில் செந்தாரகை இறந்துள்ளதால், வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு செந்தாரகை வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். அதன் பிறகு தன் மகளை சமாதானம் செய்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக போலீசாரின் முதற்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சில நாட்களாக செந்தாரகை மனமுடைந்து காணப்பட்டுள்ளார். செந்தாரகையை சுதந்திரமாக வெளியில் செல்வதற்கு கூட பெற்றோர் அனுமதிக்கவில்லை எனப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் திடீரென மர்ம மரணம் அடைந்துள்ளார்.

ஆனால் உயிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு சில குறுஞ்செய்திகளை செந்தாரகை அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. அதில் பெற்றோரால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும், உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். , ‘ஒரு ஒன் வீக் பிளீஸ் வந்து கூட்டிட்டு போங்க, பேசிட்டு அனுப்புங்க,, எனக்கு பயமா இருக்கு. வந்து கூட்டிட்டு போங்க. இந்த மொபைல எடுத்து நான் தெரியாம மெசேஜ் பண்றேன். என்ன ஏதாச்சும் பண்ணிடுவாங்க’ என்று போன்ற தகவல்கள் அதில் இருக்கின்றன.

இதனால் செந்தாரகையின் மரணத்திற்கு அவரது பெற்றோரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறித்து உறுதியான தகவல் தெரிவிக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com