“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு...” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தந்தை ப.சிதம்பரத்திற்கு, அவர் சிறையில் இருந்த நாட்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டு மகன் கார்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாளாகும். இந்நிலையில் தந்தைக்கு கார்த்தி எழுதியுள்ள கடிதத்தில், வீட்டில் அவர் இல்லாதது குடும்பத்தினரின் இதயத்தை நொறுக்கியுள்ளதாகவும், அவர் வீடு திரும்பும்போது கேக் வெட்டி கொண்டாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனை மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வை தெரிவித்துள்ளார். இதேபோல், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாக குறைந்தது, காஷ்மீர் 40 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த நிலையில் அங்கு விளையும் ஆப்பிள்களை நேரடியாக கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்தது போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, தற்போது நிகழ்த்தப்பட்டு வரும் அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி உண்மையின் துணையுடன் வெளிவருவீர்கள் என நம்பிக்கை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

