மக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்..?: ‘நமது அம்மா’ நாளிதழ் கேள்வி
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
' நமது அம்மா' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கவிதையில், மனிதன் நிம்மதியாய் வாழும் சூழல் இல்லை என்கிற அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெருங் கவலை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியனின் கவலை, சர்க்காருக்கு ஏன் புரியவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலையேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில், நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே என்றும், சிலிண்டர் விலை உயர்வைக் கேட்டு மக்கள் கவலைப்படுவதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு நடிப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துவதாக குறிப்பிட்டுள்ள ' நமது அம்மா' நாளிதழ், இதுபோன்ற காரணங்கள் தான் ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ என கேள்வி எழுப்பியுள்ளது.