திருவாரூரில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்?
திருவாரூர் இடைத்தேர்தல் முக்கிய கட்சி வேட்பாளர்கள் போட்டியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திருவாரூர் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.காமராசு, திருவாரூர் அதிமுக மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் எனவும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜனவரி 4 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2 முதல் 3 ஆம் தேதி வரை வழங்கலாம் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
அதேபோல் அதிமுகவும் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2 முதல் 3 ஆம் தேதி வரை வழங்கலாம் எனத் தெரிவித்தது. ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என திமுகவும் ஜனவரி 4 ஆம் தேதி போட்டியிடப்போகும் வேட்பாளர் குறித்து பரிசீலிக்கப்படும் என அதிமுகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சிகள் யாரை முன்னிருத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவாரூர் என்றவுடன் கருணாநிதிதான் நினைவிற்கு வந்தார். தற்போது அவர் இல்லாத இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்பதே திருவாரூர் வேட்பாளர்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் முக்கிய கட்சி வேட்பாளர்கள் போட்டியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராசு, அதிமுக மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.