என் காதலன் எங்கே? காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா

என் காதலன் எங்கே? காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா
என் காதலன் எங்கே? காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரது மகள் அன்பரசி(23). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் விஸ்வநாதன்(27). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் காதல் அதிகரித்த நிலையில் விஸ்வநாதன் விரைவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி அன்பரசியுடன் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் விஸ்வநாதனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது அன்பரசிக்கு தெரியவந்துள்ளது. பின்னர், அன்பரசி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல் துறை சார்பில் அன்பரசிக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு நீதி கிடைக்காத மன அழுத்தத்தில் அந்த பெண் விஷம் அருந்தி திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியதாகவும் தெரிகிறது.  

இந்நிலையில் விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமண செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்து, என் காதலன் எங்கே? என எழுதப்பட்ட பலகையுடன் காதலன் வீட்டின் முன் அன்பரசி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com