ராமர் கோவில் திறப்பு விழாவில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயங்கள் என்னென்ன?

வாரணாசியை சேர்ந்த பண்டிட் லட்சுமிகாந்த் மதுரநாத் தீட்சித் என்பவர் தலைமையிலான 121 பேர் கொண்ட குழு சிலை நிறுவுதலுக்கான சடங்குகளை முன்னின்று நடத்த உள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா அன்று என்னென்ன சடங்குகள் நிகழ்த்தப்படும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

ராமர் கோயிலில் 22ஆம் தேதி நடைபெற உள்ள பிரதான நிகழ்வு பிராண பிரதிஷ்டை அதாவது சிலைக்கு உயிர் கொடுத்தல் ஆகும். இது 22ஆம் தேதி மதியம் 12 மணி 29 நிமிடம் 8ஆவது நொடியில் தொடங்கி 12 மணி 30 நிமிடம் 32 நொடி வரை மொத்தம் 84 நொடிகள் நடைபெற உள்ளது. வாரணாசியை சேர்ந்த ஞானேஸ்வர் சாஸ்திரி டிராவிட் என்பவர் கணித்து தந்த நேரப்படி சிலை நிறுவுதல் நேரம் துல்லியமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசியை சேர்ந்த பண்டிட் லட்சுமிகாந்த் மதுரநாத் தீட்சித் என்பவர் தலைமையிலான 121 பேர் கொண்ட குழு சிலை நிறுவுதலுக்கான சடங்குகளை முன்னின்று நடத்த உள்ளது. சிலை நிறுவுதலுக்கு முன்பாக இந்து பாரம்பரியப்படி பல்வேறு யாகங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. 22ஆம் தேதி சிலைத்திறப்பு நடைபெறவிருந்தாலும் அதற்கான சடங்குகள் 16ஆம் தேதியே தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த நாட்களில் சிலை நீரிலும் தானியங்களிலும் நெய்யிலும் மூழ்க வைக்கப்பட்டு 108 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புனிதப்படுத்தப்படும். இதன் பின்னர் அச்சிலை கருவறைக்குள் கொண்டு சென்று பீடத்தில் வைக்கப்பட்டு நிறுவப்படும். அப்போது பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் ட்ரஸ்ட் தலைவர் மகந்த் நிருத்யகோபால் தாஸ் ஆகியோர் கருவறைக்குள் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com