“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..?” - மக்கள் ஆதங்கம்

“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..?” - மக்கள் ஆதங்கம்
“நடைபாதைகளை உடைத்து கருணாநிதிக்கு பேனர் வைக்க வேண்டுமா..?” - மக்கள் ஆதங்கம்

50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

"தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் என பல தேசிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் நினைவேந்தல் கூட்டத்தையொட்டி பல இடங்களிலும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அதேபோல கருணாநிதியின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவரின் சாதனைகளை விளக்கி ஆங்காங்கே பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனரில் கருணாநிதியின் பல அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் பேனர் வைப்பதற்காக மக்களின் நடைபாதைகள் உடைக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேனர்களை வைப்பதற்கான மரக் கொம்புகளை நடுவதற்கு சாலையோர நடைபாதைகள் உடைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மக்கள் அதில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு பேனர்கள் நடைபாதையை மறித்தும் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒருமுறை அண்ணா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் இன்று கருணாநிதிக்கு வைக்கப்பட்டதை போல மக்களின் சாலையோர நடைபாதையை உடைத்தே வைக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி வெளிவர பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடடினயாக சரி செய்து முன்பிருந்த நிலைக்கு கொண்டுவர ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் திமுகவினரும் இந்த வேலையை இறங்கி செய்தனர். பேனர் வைக்கப்பட்ட சமயத்தில் பழுதடைந்த நடைபாதைகளை அவர்களாகவே சீரமைத்தனர்.

திமுக எம்எல்ஏ அன்பழகனும் இனி இதுபோன்று நடக்காது என உறுதி அளித்திருந்தார். மேலும் திமுகவினர் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பேனர்கள், கட்அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் என பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படுத்தும் எதனையும் வைக்க வேண்டாம் என ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரிலும் அதே தவறு நடந்துள்ளது.

50 ஆண்டுகளாக தலைவராக இருந்த கருணாநிதிக்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தையொட்டி பேனர்கள் வைக்கப்படுவதில் சில தவறுகள் நடந்துள்ளன என்று மக்கள் புகார் கூறுகின்றனர். மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இப்படி பேனர்கள் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். நடைபாதைகளை உடைப்பது தேவையற்றது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நடந்ததை போன்று திமுகவினரையே  உடைக்கப்பட்ட பாதைகளை சரிசெய்ய ஸ்டாலின் மீண்டும் உத்தரவிடுவார் என நாம் நம்பலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com