73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)

73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் ஏற்கனவே ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிட்டது. பெங்களூருவும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில் தேவையானதை அடைந்திருக்கிறார்கள். வென்றிருக்கிறார்கள். வெல்ல வைத்தது விராட் கோலியே.

குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்களை எடுத்திருந்தது. பெங்களூரு அணி 19 ஓவர்களிலேயே வெற்றிகரமாக சேஸிங்கை முடித்திருந்தது. சேஸிங்கின் போது விராட் கோலி மட்டும் 54 பந்துகளில் 73 ரன்களை அடித்திருந்தார். மேட்ச்சை மொத்தமாக பெங்களூரு பக்கமாக சாய்த்துவிட்டுதான் அவுட் ஆகியிருந்தார். ஆகையால், இதை ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் என்றே சொல்லலாம். ஆட்டநாயகன் விருதுமே கூட கோலிக்குதான் வழங்கப்பட்டிருந்தது.

விராட் கோலி இந்த சீசனில் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவரது ஃபார்மில் ஏற்பட்டிருக்கும் சரிவு இங்கே இந்த சீசனிலும் தொடர்ந்திருந்தது. 13 போட்டிகளில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைல் ரேட் 110 ஐ சுற்றித்தான் இருந்தது. மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 3 கோலிக்கு செட் ஆகவில்லை, கோலியின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸை வெளிக்கொணர்ந்த ஓப்பனிங் ஸ்பாட்டுக்கு அவரை மாற்றுவோம் என அதையும் செய்து பார்த்தார்கள். கோலி ஓப்பனிங்கில் டூப்ளெஸ்சிஸூடன் இறங்கினார். ஆனால், அங்கேயும் எந்த மாற்றமும் இல்லாமல் தடுமாறினார். தொடர்ந்து சொதப்பினார். குஜராத்துக்கு எதிராக இதற்கு முன் ஆடிய போட்டியில் அரைசதம் அடித்திருப்பார். இந்த சீசனில் கோலியின் முதல் அரைசதம் அதுதான். ஆனால், அது கொண்டாடத்தக்க வகையிலான அரைசதமாக இல்லை. கோலியின் ஃபார்ம் அவுட்டை ஹைலைட் செய்து காட்டும் இன்னிங்ஸாகத்தான் அது இருந்தது. 58 ரன்களை அடித்திருந்த கோலி அதற்காக 53 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஸ்ட்ரைக் ரேட் 109 தான். ரொம்பவே மந்தமான இன்னிங்ஸ் இது.

'கோலி கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டும். அவரிடம் இன்னும் 6-7 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. ஓய்வே இன்றி ஆடி அதை கெடுத்துவிடக்கூடாது' என ரவிசாஸ்திரி அறிவுரை கூறியிருந்தனர். பெரும்பாலான முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் இந்த கருத்தை ஆமோதித்தனர்.

ஆனால், கோலி அப்படியான முடிவை எடுக்கவில்லை. தொடர்ந்து ஆடினார். இப்போது குஜராத்துக்கு எதிராக ஒரு மிகச்சிறப்பான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார்.

கடந்த சில போட்டிகளாக கோலி பயங்கர விரக்தியாக காணப்பட்டார். அவுட் ஆகிவிட்டு 'அட கடவுளே...என் மீது கருணையே இல்லையா' என்பதை போல வானத்தை பார்த்து சோக ரியாக்சனெல்லாம் கொடுத்திருப்பார். இந்த விரக்தி மனநிலை குறித்து வெளிப்படையாக பேசவும் செய்தார். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார். 'நான் இப்போதும் மிகச்சிறப்பாக துல்லியமாக கவர் ட்ரைவ் ஆடுகிறேன். என்னால் ட்ரைவ் ஆட முடியாமல் போகும்போது நான் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிவிடுவேன்' என பேசியிருந்தார். கோலியின் கவர் ட்ரைவில் வெளிப்படும் துல்லியத்தன்மை அவரின் மன உறுதியிலும் வெளிப்பட்டிருந்தது.

வென்றே ஆக வேண்டிய போட்டியில் நேற்று பெங்களூரு சேஸிங்கை தொடங்கிய போது டூப்ளெஸ்சிஸூடன் கோலியே ஓப்பனராக வந்தார். சமீப வழக்கமாக அவரிடம் இருக்கும் விரக்தி இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இல்லை. முதல் பந்திலேயே மிக உற்சாகமாக மிட் ஆஃபில் தட்டிவிட்டு ரன்னே இல்லாத ஒரு பந்தில் குவிக் சிங்கிள் எடுத்து பாசிட்டிவ்வாக தொடங்கியிருந்தார். ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் பெரிய மூவ்மெண்ட் இல்லாமல் அவரின் தலைக்கு மேலேயே ஒரு பவுண்டரியை அடித்திருப்பார். இந்த ஷாட் அத்தனை நேர்த்தியாக ஷமியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது. கோலி ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடப்போகிறார் என்பதற்கான அறிகுறியாக இந்த ஷாட் அமைந்திருந்தது. 'பௌலரின் தலைக்கு மேல் அடித்த அந்த ஷாட்தான் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான நம்பிக்கையை கொடுத்தது' என கோலியே Post Match Presentation இல் இந்த ஷாட்டை குறிப்பிட்டு பேசியிருப்பார்.

ஸ்பின்னருக்கு எதிராக திணறுவார் என்பதால் ஹர்திக் பாண்ட்யா ரஷீத்கானை பவர்ப்ளேக்குள்ளேயே அழைத்து வந்தார். குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரஷீத்கானுக்கு எதிராக 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே கோலி எடுத்திருப்பார். அரைசதம் அடித்த போதும் ஒரு ரஷீத்கானின் பந்தில் ஒரு பவுண்டரியை கூட அடித்திருக்கமாட்டார். ஆனால், இங்கே எப்படி ஷமியின் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியை அடித்தாரோ அதேபோல ரஷீத்கான் வீசிய முதல் ஓவரிலேயே அவரின் தலைக்கு மேலேயே ஒரு பவுண்டரியை அடித்திருப்பார். பின்னர், ரஷீத்கானின் பந்தில் சிக்சர் அடித்துதான் அரைசதத்தையும் நிறைவு செய்திருப்பார். ரஷீத்கானின் பந்தில் கடைசியாக அவுட் ஆகும் முன்பு கூட இறங்கி வந்து ஒரு சிக்சரை அவரின் தலைக்கு மேல் அடித்துவிட்டுதான் அவுட் ஆகியிருப்பார். இந்த மாதிரியான ஆதிக்கம்தான் கடந்த போட்டிகளில் கோலியிடம் மிஸ் ஆகியிருந்தது. இந்த போட்டியில் அதை தொடக்கத்திலிருந்தே நன்றாக வெளிப்படுத்தினார். அதன் விளைவுதான் இந்த 73 ரன்கள்.

இந்த ஒரு போட்டியை வைத்து கோலி முழுமையாக ஃபார்முக்கு வந்துவிட்டார் என சொல்ல முடியாது. இன்னிங்ஸின் பிற்பாதியில் கொஞ்சம் மந்தமாக ஆடும் தன்மை இந்த போட்டியிலுமே கோலியிடம் வெளிப்பட்டிருந்தது. ஆனால், மொத்தமாக பார்க்கும்போது நீண்ட நாட்கள் கழித்து கோலியிடமிருந்து வந்த ஒரு நல்ல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இது என்பதை யாராலும் மறுக்க முடிந்தது. குறைகளை கலைந்து இன்னும் இதுபோன்ற இன்னிங்ஸ்களை கோலி தொடர்ந்து ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com