
ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் பலவும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் தான் தவறான எண்ணத்தில் ஆண்டாள் குறித்து கூறவில்லை, தன்னுடைய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து நேற்று வீடியோ பதிவு ஒன்றினை வைரமுத்து வெளியிட்டார். ஆனாலும், பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த விஜயகாந்த், அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் சடகோப ராமானுஜ ஜீயர் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அரசியலை பொறுத்தவரை ரஜினியும், கமலும் ஜூனியர்கள் என்றும், தான் சீனியர் என்றும் கூறிய விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.