திருமாவளவன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
திருமாவளவன் இணைய பக்கத்தில் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இதில் 40க்கும் அதிகமான கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த புத்தகத்தின் பிரதியை சென்னை புத்தக கண்காட்சியில் கடந்த மாதம் வெளியிட்டார். அப்போது புத்தகத்தை வெளியிட்டு பேசிய திருமாவளவன், முறைப்படி அரசியல்வாதிகளை அழைத்து புத்தக வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது அந்த புத்தகத்தை திருமாவளவன் முக்கிய தலைவர்களை சந்தித்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த வரிசையில், அமைப்பாய் திரள்வோம் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியதாக கூறப்படுகிறது.

