யாருமே எதிர்பார்க்காத வகையில் வேலூர் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இவ்வளவு பரபரப்பாக இருக்கும் என்று நேற்று காலை வரை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதும், முதல் சில மணி நேர வாக்கு எண்ணிகள் அதிமுகவிற்கு சாதகமாகவே இருந்தன.
எப்படியும் அதிமுக வெற்றி பெற்றுவிடும் என அக்கட்சி தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து முன்கூட்டியே கொண்டாடினர். ஆனால், பாதிக்கும் மேல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கை ஓங்கியது. அதிக வாக்குவித்தியாசம் இல்லையென்றாலும் கடைசி வரை அவர் முன்னிலையிலே இருந்தார். இறுதியில், வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
வாக்குகள் நிலவரம்:
திமுக(கதிர் ஆனந்த்) - 4,85,340 (47.30%)
அதிமுக(ஏசி.சண்முகம்) - 4,77,199 (46.5%)
நாம் தமிழர்(தீபலட்சுமி) - 26,995 (2.63%)
மற்றவர்கள் - 27,104 (நோட்டா உட்பட)
நோட்டா - 9,417 (0.92%)
தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தொகுதி வாரியாக.....
வேலூர்:
திமுக - 78901
அதிமுக - 72626
வித்தியாசம் - 6374 (திமுக முன்னிலை)
அணைக்கட்டு:
அதிமுக - 88770
திமுக - 79231
வித்தியாசம் - 9539 (அதிமுக முன்னிலை)
குடியாத்தம்:
அதிமுக - 94178
திமுக - 82887
வித்தியாசம் - 11291 (அதிமுக முன்னிலை)
கேவி குப்பம்:
அதிமுக - 80100
திமுக - 71991
வித்தியாசம் - 8109 (அதிமுக முன்னிலை)
வாணியம்பாடி:
திமுக - 92599
அதிமுக - 70248
வித்தியாசம் - 22,311 (திமுக முன்னிலை)
ஆம்பூர்:
திமுக - 79371
அதிமுக - 70768
வித்தியாசம் - 8603 (திமுக முன்னிலை)
இந்த தேர்தல் முடிவுகளின் படி திமுக, அதிமுகவுக்கு மக்கள் கிட்டத்தட்ட சரிபாதி அளவிற்கு வாக்களித்துள்ளனர். 8 வாக்குகள் வித்தியாசம் என்பது சட்டமன்ற தேர்தலில் கூட மிகவும் குறைவானது. நாடாளுமன்ற தேர்தல் என்றால் அது மிகவும் குறைவான வித்தியாசம். கடந்த மக்களவை தேர்தலில் திமுக 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமானது என்னவென்றால் வாக்கு வித்தியாசம் லட்ச கணக்கில் இருந்தது. திமுகவின் வாக்கு வங்கி சதவீதம் 52 ஆக இருந்தது. ஆனால், அதிமுகவின் வாக்கு சதவீதம் 30க்கும் குறைவாக இருந்தது.
மக்களவை பொதுத் தேர்தலைப் போல், வேலூர் தேர்தலில் ஒரு பக்கமாக மக்கள் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றிருந்த அதிமுகவிற்கு இது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும். அதேபோல், திமுகவிற்கு கூடுதலாக ஒரு வெற்றி என்றே இது கணக்கில் கொள்ளப்படும். இரு கட்சிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியமான பாடத்தை மக்கள் இந்த தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அது, தங்கள் கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை இருதரப்பினரும் மீண்டும் பரிசோதித்து கொள்ள வேண்டும் என்பதாகவே அது தெரிகிறது.