கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு வைகோ பாராட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.
கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் 26 பேர் பிராமணர்கள். பிராமணர் அல்லாதோர் 36 பேர். ஆக 62 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேர். இந்த நடவடிக்கைக்காக கேரள அரசின் முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி இருக்கிறார் வைகோ.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் அவர்கள் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது வரலாற்றின் வைர வரிகளாகும். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்திய கேரளாவில் பெற்ற வெற்றியை, பெரியார் பிறந்த தமிழகத்தில் ஈட்ட முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.