தனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும் களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, அம்மாநிலத்துக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி ஏ.எஃப்.டி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
நேர்மையான, உண்மையான, திறமையான நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்துள்ள மக்கள் நீதி மய்யம், புதுச்சேரிக்கென புதிய கடன் எதுவும் வாங்கப்படாது என்றும், முன்னாள் முதல்வர்கள் வாங்கிய கடனையும், வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது.
லோக்பால் சட்டம் அமல்படுத்தப்படும், புதுச்சேரி மாநிலத்துக்கென தனி பல்கலைக்கழகம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பல உறுதிமொழிகளை அளித்துள்ள அக்கட்சி, உலகத் தரத்தில் புதுச்சேரிக்கென தொழிற்நுட்ப பூங்கா நிறுவி, அதில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
இதனிடையே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி வேட்பாளர் டாக்டர் சுப்ரமணியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன். தமது ஒவ்வொரு நகர்வும், விரோதிகள் அளித்த யோசனைகளே என்றும் கூறினார் தொடர்ந்து பேசிய அவர், தவறுகளை சுட்டிக்காட்ட ஆட்காட்டி விரலின் மை போதும் என கூறிய அவர், தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தனித்து நிற்பதாக விளக்கமளித்தார். உங்கள் வாக்கு, உங்களின் தலையெழுத்தை நிச்சயம் மாற்றும் என கூறிய கமல்ஹாசன், இனி தனது எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான் என தெரிவித்தார்.