உன்னாவ் சம்பவம்: பாஜக எம்எல்ஏக்கு 7 நாள் போலீஸ் காவல்
உத்திரபிரதேசத்தில் 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக எம்.எல்.ஏக்கு 7 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் மாணவியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரில் எம்எல்ஏவின் சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும்,
புகாருக்குள்ளான எம்எல்ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
இதனையடுத்து, குல்தீப் சிங்கை சிபிஐ போலீசார் இன்று அலகாபாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது மே 2ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நீதிமன்றம் பாஜக எம்.எல்.ஏ தரப்பில் குல்தீப் சிங்கிற்கு 7 நாள் சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப் சிங், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் நீதித்துறையின் மீதும், கடவுள் மீதும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.