243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் இந்த மாதம் 28 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் பாட்னா விமான நிலையத்தின் கட்டுமானக் கம்பிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ரவிசங்கர் பிரசாத் உயிர் தப்பியுள்ளார்.
இன்று மாலை பாட்னா விமான நிலையத்தில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிரங்கும்போது, அதன் விசிறிகள் கட்டுமான இடத்தின் கம்பியில் மோதியதோடு இரண்டு ரோட்டார் பிளேடுகள் உடைந்தன. ரவிசங்கர் பிரசாத்துடன் பீகார் சுகாதரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஜா ஆகியோர் உடனிருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என்பதை ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இம்மாதம், 23, 28, நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.