மறைந்த எம்.எல்.ஏ. அன்பழகனின் மகனுக்கு திமுகவில் பொறுப்பு – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வந்த ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் பரபரப்பாக இயங்கி பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வந்தார்.
இதனிடையே கடந்த மே 2-ஆம் தேதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 10-ம் தேதி சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அன்பழகனின் மரணம் நாடு முழுவதும் பேசுபொருளானது. திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அன்பழகனின் மகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சிற்றரசு அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக மறைந்த எம்.எல்.ஏ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

