இரட்டை இலை அடிமைகளிடம் இருக்கக் கூடாது: டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் அதிமுக தொண்டர்களுடையது என்றும் அது அடிமைகளாக இருப்பவர்களிடம் இருக்கக் கூடாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன்னிலையில் மனுத்தாக்கல் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், தொப்பி சின்னத்தை தமக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் என்பது அதிமுக தொண்டர்களுடையது என தெரிவித்த அவர், அடிமைகளாக இருப்பவர்களிடம் சின்னம் இருக்கக்கூடாது என தெரிவித்தார். முன்னதாக தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அண்ணா உருவம் பொறிக்கப்படாத அதிமுக கொடியின் கருப்பு, சிகப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடிகளை அவரது ஆதரவாளர்கள் ஏந்திச் சென்றனர். அதுகுறித்து பதிலளித்த தினகரன், இது தாம் வழக்கமாக பயன்படுத்தும் கொடிதான் என விளக்கமளித்தார்.