காவிரி கொந்தளிப்பில் கர்நாடகத்தில் இருந்து துணைவேந்தரா ? டிடிவி தினகரன் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டதற்கு அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தினகரன், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றும் வாய்ப்பு, தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படாத போதே எதிர்ப்புகள் எழுந்தனர். தற்போது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்தின் தமிழகத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டப்படி இது தவறல்லை என்று வாதிட்டாலும், இது மரபை மீறிய தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்து நடவடிக்கையாகும். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் கொந்தளிப்பான ஒரு சூழல் நிலவும்போது, இப்படி ஒரு நியமனம் தேவைதானா என்ற நியாயமான கேள்வி எழுகிறது” என தினகரன் கூறியுள்ளார்.