ஒபிஎஸுக்கு முதல்வர் பதவி பெற்றுத்தரவே மோடி வருகிறார்: தங்க தமிழ்செல்வன்
ஒ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பதவி பெற்றுக்கொடுக்கவே பிரதமர் மோடி சென்னை வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மாலை சுமார் 5 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார். கலைவாணர் அரங்கத்தில், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் மோடி, விழா முடிந்ததும் ஆளுநர் மாளிகையில் இன்றிரவு தங்குகிறார்.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பதவி பெற்றுக்கொடுக்கவே பிரதமர் மோடி சென்னை வருவதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மோடி சொல்லிதான் இபிஎஸ் உடன் சேர்ந்தேன் என்கிறார் ஓபிஎஸ். ஏன் சேர்ந்தார் என்றால், ஒரு வருடம் கழித்து முதல்வர் பதவி அவருக்குத் தருவதாகதான் ஒப்பந்தம். அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவே மோடி வருகிறார். அம்மா ஸ்கூட்டர் வழங்க வருகிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தப் பேச்சுவார்த்தை சரியாக முடியவில்லை என்றால் மீண்டும் குழப்பம்தான்” என்றார்.