ஆசியாவிலே மிக உயரமான கொடிக்கம்பத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் இந்தக் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், 123 அடி உயர கொடிக்கம்பத்தில் தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். 20 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கப் போகிறது எனத் தெரிவித்தார். மேலும் விருதுநகர் மற்றும் தென்காசி பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் எனவும் பேசினார்.

