இன்றைய முக்கிய செய்திகள்..

இன்றைய முக்கிய செய்திகள்..
இன்றைய முக்கிய செய்திகள்..

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கி‌ரஸ், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 21 க‌ட்சிகள் கலந்து கொண்டன. இதில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பும், ஐந்து கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.

ஏமாற்று வாக்குறுதிகளை நம்பி இடஒதுக்கீட்டுக் கொள்கையை பலிகொடுத்துவிடக்கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில்‌ திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ‌இ‌டஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்த முடியாது என தெரிவித்தார். 10 சதவிகித இடஓதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள‌ 69 சதகிவித இ‌டஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடக்கிவைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து தினசரி ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்‌கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது என்று தெரியவரும்.

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கடைசி நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அமானுல்லா என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அமானுல்லாவின் நண்பர்கள் 9 பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் மான்சஸ்டர் நகரில் நடைபெறுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com