தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லி பயணம்: தீர்மானங்கள் ஏற்கப்படுமா?
ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க, தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லி
சென்றனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என அதிமுக இரண்டாகப்
பிளவுபட்டது. இதையடுத்து நடைபெறயிருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை
கொண்டாட, இரு தரப்புமே தேர்தல் ஆணையத்தை நாடினர். இதில் இரு தரப்பிலிருந்தும் ஏராளமான ஆவணப் பத்திரங்கள்
தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், இரு தரப்பிற்கும் வேறு
சின்னங்களை வழங்கியது. இந்நிலையில் தினகரன் ஆதரவு அணி என அதிமுக மூன்று அணிகளாக பிரிய, மீண்டும் பழனிசாமி
மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.
தினகரன் அணியுடன் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சிப்பெயரை
மீட்கும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 12ஆம் தேதி
ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் தரப்பின் சார்பாக நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள், கட்சி சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தமிழக
அமைச்சர்கள் இன்று டெல்லி சென்றனர்.
ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் உள்ள நிலையில், கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார்.
உதயகுமார் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றனர். இரு அணிகளும் இணைந்தது,
பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்களின் நகல்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையத்திடம் முதலமைச்சர் தரப்பு வழங்க
உள்ளது.