சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தியில்லை என ஆளும் கட்சி எம்எல்ஏ கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பெருந்துறை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், தங்கள் தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதேபகுதிக்கு அருகில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையில்லை என்றார். அதற்கு பதில் கருத்து தெரிவித்த தோப்பு வெங்கடாசலம், எப்போதும் புள்ளி விவரங்களை சட்டப்பேரவையில் பேசும் சுகாதாரத்துறை அமைச்சரின் தற்போதைய பதில் திருப்தி தரவில்லை என்றார். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.