பேக்கரியில் கேக் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி : காரணம் என்ன ?
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பேக்கரியில் கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 28 வயது வாலிபர் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மூன்று குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக உணவகங்கள் பயன்படுத்தி அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு அதன் காலாவதி நிலைமையை கருத்தில் கொண்டு தூக்கி எறிந்திருக்க வேண்டும்.
ஆனால் ஊரடங்கு சமயத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாத காரணத்தினால் மிகுந்த நஷ்டத்தில் உள்ள சில உரிமையாளர்கள் ஊரடங்கு தளர்வு முடிந்தவுடன் மீண்டும் புதிதாக வாங்கிய உணவு பொருட்களுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு இருப்பு வைத்திருந்த உணவு பொருட்களையும் சேர்த்து கலப்படம் செய்து பயன்படுத்தியதன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலருக்கும் உணவு நஞ்சாகி உடல் உபாதை ஏற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பிரத்யேக குழு அமைத்து உணவு சார்ந்த பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டு, ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக அதை தடுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.