வழக்கறிஞரை துப்பாக்கி காட்டி மிரட்டிய தூத்துக்குடி எஸ்.ஐ. திண்டுக்கல்லுக்கு இடமாற்றம்!
வழக்கறிஞரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.ஐ. இசக்கிராஜா திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வருபவர் இசக்கிராஜா. கடந்த 8-ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மணக்கரையை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரை பிடிக்க முயன்றபோது அவரது வழக்கறிஞர் இசக்கிபாண்டியனுக்கும் இசக்கிராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது இசக்கிராஜா வழக்கறிஞர் இசக்கி பாண்டியனை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் இசக்கிராஜா மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் கோவில்பட்டியில் எஸ்.ஐ.யாக பணியாற்றியபோதும் இசக்கிராஜா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில் இசக்கிராஜாவை திண்டுக்கல் சரகத்திற்கு இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.