“ ஈ.வி.கே.எஸ். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்” : திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனது எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட மீண்டும் வாஜ்பாய் இருந்த பாஜகவுக்கு சென்றால் அவருக்கு அங்கு நல்ல எதிர்காலம் உண்டு” என தெரிவித்தார். மேலும் "இப்போதும் கூட அதிக காலத் தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்றார்.
இளங்கோவனின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியினரிடம் சலசலப்பை உண்டாகியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இ.வி.கே.எஸ்-ன் இந்த கருத்துக்கு “எனது எதிர்காலத்தை குறித்து இ.வி.கே.எஸ் கவலைப்பட வேண்டாம் அவரை பற்றி கவலைப்பட்டு கொள்ளட்டும்” என்று பதில் கூறியுள்ளார்.