“தேர்தல் ஆணையம் அதிமுகவின் துணை அமைப்பா?”- திருமாவளவன் கண்டனம்

“தேர்தல் ஆணையம் அதிமுகவின் துணை அமைப்பா?”- திருமாவளவன் கண்டனம்
“தேர்தல் ஆணையம் அதிமுகவின் துணை அமைப்பா?”- திருமாவளவன் கண்டனம்

திருவாரூர் இடைத் தேர்தலுடன் ஏனைய 19 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவைத் திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் எனவும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இருபது தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் துணை அமைப்பாக மாறிவிட்டதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த ஒருதலைபட்சமான அணுகுமுறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இருபது தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதற்கு மாறாக 18 தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து காலியாக உள்ளது. அவற்றுக்குத் தேர்தல் நடத்துவதற்குத் தடை எதுவும் இல்லை. அதுபோலவே திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கும் தடை எதுவுமில்லை. 
அப்படியிருக்கும்போது திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் இருக்கிறதோ என்று ஐயப்படுகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகளின் தலையீடு இல்லாமல் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தேர்தல் ஆணையம் எப்படி கண்டும் காணாமல் இருந்ததோ அதேபோன்று முறைகேடுகளை அனுமதிக்கப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திருவாரூர் இடைத் தேர்தலுடன் ஏனைய 19 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com