மாற்றுக் கட்சியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா மக்கள் நீதி மய்யம் ?
நடைபெற்று முடிந்த மக்களவைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. நடிக்க வாய்ப்பில்லாமல் கட்சி தொடங்குகிறார் என கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
ஆனாலும் கட்சியையும் கொடியையும் பிரபலபடுத்தி மக்களை சந்தித்தார். மேலும் தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் தனது கட்சி வேட்பாளர்களை களம் இறக்கினார். இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பிரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி, அமமுக கட்சியை விட அதிக இடங்களில் வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது மக்கள் நீதி மய்யம். இதனால் அதிமுக, திமுக அணிகளுக்கு மாற்று கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவாகி வருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் கனிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.